Tribute in Light
அருவமாகிக் காற்றிலே கலந்திட்டு,
எம்முள் சுவாசமாகி, எம்மையே உணர்ந்திட்ட தோழனே..!
யார்தான் சொன்னார்கள் நீ இறந்துவிட்டாய் என்று..?
இந்த பிரபஞ்சத்தின் மர்மத்தில், நீ இன்னுமொரு பரிமாணத்துக்கு மாறினாய் என்பதை நான் எப்படி உணர்த்துவேன்..?
இறந்தவர் உடல்தானே அழிகிறது, ஆன்மா என்றும் அழிவதில்லையே..!
இந்த பூவுலகில் கொடுக்கப்பட்ட கடமைகளை முடித்துக்கொண்டு... முப்பரிமாணத்தை மட்டும் உணரும் மனிதர்களாகிய எம்மால் உணரமுடியாத, இன்னுமொரு பரிமாணத்தில் ... எம்மை உணர்ந்து கொண்டிருக்கிறாய் என்பது தானே உண்மை.
இறைவனோடு ஐக்கியமாகவோ அல்லது இறையை அடையும் பாதையிலோ பயணித்துக்கொண்டிருக்கும் உன்னை மறக்கத்தானே, எமக்கு இப்போது மனம் மறுக்கிறது.
உனது இந்த பூவுலகப் பயணத்தில் எம்மோடு மகிழ்ந்து களித்த உன்னத நினைவுகள் தாம் , இப்போது பிரிவுத் துயராக எம்மை வாட்டுகிறது தோழனே..!
மரணம் அனைவருக்கும் வரவேண்டிய காலத்தின் கட்டாயம் ..!
மரத்திலே தளிரான குருத்து, முதிர்ந்து பழுத்து ஒருநாள் மெதுவாக வீழ்தல் இயற்கையின் நிபந்தனை...
நீ இந்த உலகை விட்டுச் சென்றாலும் உன் நினைவுகள் எம்மோடுதானே வாழும்..!
நினைவுகள்தான் நிரந்தரமானவை ... !
காலம் கடந்தும் உயிர்ப்போடு இருக்கும் நிழல் தோற்றங்கள் அவை..!
நினைவுகள் உயிரை வளர்க்கும் ஒளடதம்..!
நல்ல நினைவுகளை வளர்த்தவனே நீண்டு வாழுவான்..!
மனம் நினைவுகளை மறக்கும் தருவாயில் மரணம் என்ற பாதையில் இந்த பிரபஞ்சம் எம்மை அடுத்த வாழ்க்கைக்கு அழைத்துச் செல்கிறது.
அடுத்த பரிமாணத்தில் உன் புதியவாழ்கை தொடரட்டும்..!
நீ மரணிக்கவில்லை உன் உடல்தான் மரணிக்கிறது ..!
இன்னுமொரு உருவத்தில் அல்லது அருவத்தில், விரிந்த பிரபஞ்சத்தில் மனித அறிவால் உணர முடியாத தோற்றத்தில், எம் பாசத்தை உணர்ந்துகொண்டு இறையோடு சஞ்சரித்திருக்கும் உன்னத உறவே..!
உன் ஆத்மா சாந்தியடையவும், உன் இறையை அடையும் பயணம் பூர்த்தியடையவும் இந்த பிரபஞ்ச இரகசியத்தை வணங்குகிறேன் தோழனே..!!!